ஜனாதிபதி மைத்திரி புத்திசாதுர்யமாக செயலாற்ற வேண்டும், இனிமேல் நான் ஜனாதிபதியாகப் போட்டியிடப் போவதில்லை – மகிந்த!

image

நாட்டிலே நல்லாட்சியைக் கொண்டு வருவோம் எனக் கூறி பொலிஸார் நாட்டை ஆளும் முறையொன்றையே தோற்றுவித்துள்ளனர். இதை மிகவும் பாரதூரமானதொரு விடயமாகவே காண்கிறேன். எனவே தற்போதைய ஜனாதிபதி இது விடயமாக புத்திசாதுர்யமாக செயலாற்ற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரக்காபொல தெதிகம பிரதேச விகாரையில் நடைபெற்ற விசேட பூஜையொன்றில் கலந்து கொண்டு விட்டு அங்கு திரண்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அண்மையில் பிரதமர் 19 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வேண்டிநின்றனர். 19 ஆவது திருத்தச் சட்டமே வேண்டாம் என யாரும் கூறவில்லை.

இதேபோல் 18 ஆவது திருத்தச் சட்டத்தில் சில சரத்துகளை அகற்றிவிட்டு புதிதாக சில சரத்துக்களை இணைத்துள்ளனர். அதில் ஒன்று தான் இரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாம் முறை ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட முடியாது என்பது.

இது எனக்குப் பயந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். நான் மீண்டும் ஜனாதிபதியாக வருவேன் எனப் பயந்து போயுள்ளனர். இனிமேல் நான் ஜனாதிபதியாகப் போட்டியிடப் போவதில்லை.

பசில் ராஜபக்ஷ கைதாகியுள்ளார். என்னையும் எனது குடும்பத்தாரையும் பழிவாங்கும் அரசாங்கமாகவே நல்லாட்சி அரசாங்கம் மாறியுள்ளது. அரச மாளிகையும் சிறைவாசமும் எனக்கு பழக்கப்பட்டவையே. நான் இவற்றுக்கெல்லாம் பயப்படப் போவதில்லை.

நாட்டிலே இன்று எவ்விதமான அபிவிருத்தி வேலைகளும் செய்யப்படுவதில்லை. உள்நாட்டு உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிப்படைந்து போயுள்ளனர். எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளைத் தவிர வேறெந்த அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது நாட்டை பாரியளவில் பின்னடையச் செய்யும் நடவடிக்கையாகும்.

எனது அரசாங்கத்தில் அபிவிருத்திகளையும் மக்கள் நலனையும் செம்மையாக செய்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஊழல், மோசடிக் காரர்கள் எனக் கூறுவதனை தவிர நல்லாட்சியில் வேறெதனையும் காண முடியாதுள்ளது என்றார்.

Posted on 04/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

பின்னூட்டமொன்றை இடுக